jump to navigation

லிஃப்ட் ஆகஸ்ட் 28, 2007

Posted by சித்ரன் in Uncategorized.
5 comments

சத்யானந்த் அபார்ட்மெண்ட்ஸின் லிஃப்டுக்குள்தான் நான் மாட்டிக் கொண்டது. எல்லாம் ஒரு ஐந்தாயிரம் ரூபாயின் பொருட்டு. அதை என்னிடம் கடன் வாங்கியவன் அந்த அப்பார்மெண்ட்ஸின் நான்காவது மாடியில் இருந்தான். அருந்ததியின் குடும்ப வகையில் ஏதோ ஒரு தூரத்து உறவு அவன். இருந்தாலும் கொடுத்த பணத்தை வாங்காமல் விட்டுவிடுவதா என்று அவள் விவாதத்தை முன் வைத்துத்தான் இங்கு வந்ததே.

போகும்போது கீழ்த்தளத்தில் ஓரிருவர் லிஃப்ட் பொத்தானை அமுக்கிவிட்டுக் காத்திருக்க, நான் அதை உதாசீனம் செய்துவிட்டுப் படிவழியாகவே ஏறினேன். ஒவ்வொரு தளத்துக்கும் செல்லும் படிகளின் எண்ணிக்கையைச் சற்றுக் கூடுதலாகவே வைத்திருக்கிறார்களோ என்று தோன்றியது பிறகுதான். லேசாய் மூச்சிரைக்கவுமம், கால்கடுக்கவும் செய்ய, மூன்றாவது தளம் வருவதற்குள்ளாகவே மூன்று நாளாகிவிட்ட மாதிரி ஒரு ஆயாசம்.

நாலாவதில் அந்த ஆள் வீட்டிலேயே இருந்தான். நான் வருவது தொரிந்திருந்தால் பின் சாளரம் வழியாகக் கயிறுகட்டிக் குதித்தோடியிருப்பான். கதவு திறந்து எதிர்பாராமல் என்னைப் பார்த்தும் அதிர்வுகளையெல்லாம் அழித்து மறைத்துவிட்டு ‘வாங்க’ என்றான், ரொம்ப நாள் கழித்து வந்த விருந்தினரை வரவேற்பதைப் போல, நிர்ப்பந்தமாய் தன் முகத்தை ஒளிரவிட்டுக் கொண்டான். காசு கொடுத்தவன் கொஞ்சிவிட்டுப் போக வரமாட்டானன் என்று அவனுக்குத் தெரியாதா என்ன? இருந்தாலும் இலங்கை வேந்தன் மாதிரி அவன் கலங்கியதாய்த் தொரியவில்லை.

“கலா, காப்பி கொண்டா…” என்றான்.

ஐயயோ! ஒரு காபி குடித்ததற்காக இன்னும் ஒரு மூன்று மாதத்துக்கு என்னுடைய பணத்தைத் திரும்பப் பெற அலைய வேண்டியதிருக்கும்.

“காபியெல்லாம் வேண்டாம். காசுதான் வேணும்.” கறாரில் முக்கியெடுத்த தடித்த குரல் என்னிடமிருந்து வெளிப்பட்டது. அப்புறம் கேள்விகள். பதில்கள். சமாதானங்கள். சமாளிப்புகள். பணக் கஷ்டம். மனக் கஷ்டம். ‘என் மேல் நம்பிக்கையில்லையா?’ என்றான் “மூன்று மாதங்களுக்கு முன் இருந்தது” என்றேன்.

சில மன்றாடல்களுக்குப் பிறகு புதன்கிழமை தருவதாக ஒப்புக் கொண்டான். புதன்கிழமை பணம் வராவிட்டால் நான் உன் வீட்டிலேயே வந்து குடியிருக்க நேரிடும் என்று மிரட்டிவிட்டு எழுந்தேன்.

எந்த புதன்கிழமை என்று கேட்காமல்விட்டு விட்டோம் என்று திரும்பும்போது தோன்றியது. அவனுடன் விவாதித்ததில் மிக்க களைப்பாகிவிட்டது. மிக நீண்டு இறங்கும் படிகளை நினைத்ததும் மேலும் களைப்பாகிவிட்டது.

காரிடார் காலியாய் இருந்தது. படிகளைப் புறக்கணிக்க முடிவு செய்து பொத்தானை அமுக்கினேன். ஒரு மகா முனகலுடன் லிஃப்ட் மேலேறி வந்து வாய் பிளந்து நின்றது.

நான் அதனுள் நுழையும்போது ஏதேச்சையாய் மணி பார்த்தேன். 8.59 P.M. உள்ளே வரிசையாய் இருந்த பொத்தான்களில் எழுத்துக்கள் அழிந்திருந்தன. நான் ஒருவிதமாய் அனுமானித்து ‘G’யை அமுக்கினேன். மறுபடி கதவுகள் சாத்திக் கொள்ள ஒரு பிரபஞ்சப் பயணம் மாதிரி ’ம்ம்ம்’என்று அது கீழிறங்கியது. கீழிறங்குகிறதா அல்லது மேலே ஏறுகிறதா என்று ஒருகணம் குழப்பமாயிருந்தது. மேலே மின்னணுத் திரையில் 3 என்று எழுத்து தெரிகிறது. அப்படியெனில் இறங்குமுகம்தான். கவனித்துக் கொண்டிருக்கும்போதே அது 2 ஆக மாற, எதிர்பாராத ஒரு கணத்தில் ஒரு குலுங்கலுடன் லிஃப்ட் நின்றது.

தலைக்கு மேலே குண்டு பல்ப் சட்டென்று அணைய, திடீர் இருள். திரை மறைந்திருந்தது. மின்விசிறி வேகம் குறைந்து நிற்கப் போவதை கடக் கடக் என்ற சப்தம் உணர்த்தியது. இது என்ன? மின் தடையா? மின் வெட்டா? நான் எந்தத் தளத்திலிருக்கிறேன்? இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? ஏதேனும் நிகழக் காத்திருப்பதா? உதவிக்கு யாரையாவது விளிப்பதா?

லிஃப்ட் அமைதி காத்தது. ஆட்டமில்லை, அசைவில்லை, பிரபஞ்சப் பேரமைதி. எதிர்பாராத இந்த நிகழ்வில் நான் உடல் பரபரத்து நின்றிருப்பதை சலனங்களற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது அது. தன் இந்தச் செய்கைக்கு எந்த விளக்கமும் தர அது தயாரில்லாமலிருந்தது.

இறந்தவருக்கு அஞ்சலி செய்பவன் மாதிரி ஒரு நிமிடம் மெளன அனுஷ்டிப்பில் நின்றேன். பதற்றப்படாமல் யோசிக்கலாம். இதிலிருந்து வெளியேறுவதற்கான சாத்திய கூறுகள் என்னென்ன? அந்தரத்தில் மாட்டிக் கொண்டு விட்டேன் என்ற இத்தனை நேரத்தில் நன்றாக புரிந்துவிட்ட பிறகு, வெறுமனே கால் மாற்றி நின்று கொண்டிருப்பதில் என்ன பயன்? இந்த லிஃப்ட் மறுபடி இதோ இப்போது தரையிறங்கிவிடும் என்ற என் எதிர்பார்ப்பிற்கு நான் நிர்ணயித்திருந்த கால அளவு தீர்த்து போனபின் இனி நான்தான் எதையாவது முயற்சிக்க வேண்டும் என்ற உணர்வு மீண்டது.

கையைத் திரும்பி கடிகாரத்தை உற்றுப் பார்த்தேன் ரேடியம் தொட்ட முட்களின் உபயம். 9.07. கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் ஆகிவிட்டது. நான் இதற்கு அகப்பட்டுக்கொண்டு.

தடதடவென்று கதவைத் தட்டினேன். “ஹலோ…ஓ…ஓ…” என்று மூன்று நான்கு முறை கூவினேன். யாருக்காவது கேட்குமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. அதுவும் என் அபயக்குரல் எட்ட வேண்டிய திசை பற்றித் தீர்மானமில்லாமல் இருந்தது. மீண்டும் மீண்டும் கூப்பிட்டுக் கொண்டேயிருந்தேன்.

நதிமூலம் மாதிரி நெற்றியிலிருந்து வேர்வை கசியத்தொடங்கியது. குப்பென்று அறைக்குள் வெப்பம் தாக்கியது. புகைபிடிக்கலாமா என்று யோசித்தேன். காற்று வரவும் போகவும் வழியில்லாத இதற்குள் அது உசிதமல்ல. மேலும் ‘புகை பிடிக்காதீர்கள்’ அறிவிப்பை லிஃப்டுக்குள் பார்த்ததாகவும் ஞாபகம். ஆ! என்னிடம் தீப்பெட்டி இருக்கிறது. பாக்கெட்டிலிருந்து அதை எடுத்தேன். ஒரு குச்சி உரசி எழுந்த கந்தக நெடி மூக்கில் நுழைந்து சுவாச திணறலை ஏற்படுத்தியது. ஆடி அசைந்த வெளிச்சத்தில் எதற்கும் இருக்கட்டும் என்று எல்லாப் பொத்தான்களையும் ஒருமுறை தட்டிப் பார்த்தேன். உலகம் ஸ்தம்பித்து நின்றிருந்தது. தீக்குச்சி அணைந்து இருள் அவசரமாக அந்த அறை தனது என்பதுபோல் மறுபடியும் நிறைத்துக் கொண்டது.

மின்சாரம் போயிருந்தால் என்ன? ஜெனரேட்டர் இருக்க வேண்டுமே? அது ஏன் இன்னும் இயக்கப்படவில்லை? மறுபடி கதவை ‘தட்தட்’ என்று தட்டினேன். இந்த முறை பதிலுக்கு ஈனமான குரலொன்று கேட்டது. ஒரு குரல். இரு குரல். பல குரல்கள். நன்றி! நான் இந்தப் பொறிக்குள் ஒரு எலியைப் போல மாட்டிக் கொண்டிருப்பதை சக மனிதர்கள் எப்படியோ அறிந்துகொண்டு விட்டார்கள் என்று உறுதிப்பட்டு விட்டது. நான் நிச்சயம் காப்பாற்றப்பட்டு விடுவேன்.

பொங்கும் வியர்வையைத் துடைத்து ஈரமாகிவிட்டது கர்சீப். அப்படி இப்படியாக ஒரு அரை மணி நேரம் ஓடிவிட்டது என்ன ஆயிற்று இதற்கு? முழுசாய் இரையை விழுங்கிக் கொண்டு கிடக்கிற மலைப்பாம்பு மாதிரி அசையாமல் கிடக்கிறது. அதன் வயிற்றுக்குள் பாதி இறந்த நான் துருவப் பிரதேசப் பனிபோல என் இயக்கங்கள் உறைய ஆரம்பித்திருந்தன.

எப்படியாவது இதிலிருந்து விடுபடும்வரை ஹென்றி ஷாரியர் மாதிரி இதற்குள் நடந்து கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. வெறும் ஆறுக்கு நாலு அடி அளவில் இருக்கிற இந்தப் பெட்டிக்குள் இரண்டு எட்டு வைக்கக்கூட இடமில்லை. பிறகு அதை எப்படி நடத்தல் என்று சொல்ல முடியும்? ஆகவே, நான் நகர்ந்தேன். ஒரு நான்கு முறை இப்படியும் அப்படியுமாக. பட்டாம்பூச்சி நாவலில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட ஹென்றி ஷாரியர் இப்பபோது ஞாபகத்துக்கு வந்ததும் தவிர்க்க இயலாத எண்ணமாயிருந்தது. இரு வருடங்கள் ஒரு சிறு அறையில் எப்படித் தனித்துக் கழித்தான் என்று ஆச்சரியம் விரிந்து நின்றது. ஒரு நாள் இதற்குள் நான் இருந்தாலே மனச்சிதைவு அடைந்துவிடுவேன் என்று தோன்றியது.

எதற்காக இந்த நேரம் பார்த்து இந்த இடத்துக்கு வந்தேன்? கடன்காரனின் பொருட்டு. சிரமம் பார்க்காமல் வரும்போது படி வழியாகவே இறங்கியிருக்கலாம். இதற்குள் ஏறித் தொலைய நேரிட்டது எதனால்? கடந்து கொண்டிருக்கிற நம்பிக்கையின் பிடியைத் தளர்த்திக் கொண்டிருந்தது. இன்று நான் கீழிறங்கி வீடு போய்ச் சேர்வேன் என்று தோன்றவில்லை. இத்தனைநேரமாகியும் காணோமே என்று அருந்ததி குழந்தையை மடியில் இருத்திக் கொண்டு வாசற்படியிலேயே கலவரமாய் காத்துக் கொண்டிருப்பாள். கம்பெனிக்கு ரமேஷூக்கும் போன் செய்து கேட்டிருப்பான். ‘இங்கே வரலையே’ அல்லது அவர் அப்பவே கிளம்பிட்டாறே என்ற பதில்களில் அவள் பதற்றம் மேலும் கூடியிருக்கும்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேலான என் வாழ்நாளில் உன்னதப் பொழுதை இந்த லிஃப்ட் களவாடிவிட்டது அநியாயமாகப்பட்டது. இந்த நேரத்தை எப்படி நான் வழந்ததாய்க் கணக்கில் எடுத்துக் கொள்வது இவ்வுலகின் கவனங்களிலிருந்து நான் தொலைந்து போய் விட்டானோ? ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளாரின் சிரத்தையோடு என்னை யாராவது கண்டெடுப்பார்களா?

மனத்திலும் உடலிலும் ஒரு போர்வையாகக் கவிந்து கொண்டது சோர்வு. ஏதேதோ எண்ணங்கள் கோர்வையற்று தோன்றி மறைந்தன. நேரமாக ஆக கவலையின் கனம் அதிகா¢த்துக் கொண்டே போனது. கேட்கும் சிறுசிறு சப்தங்களைக் காது உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது. நிறைய சலசலப்புக் கேட்டது. அதல பாதளங்களைதத் தாண்டி மனிதர்கள் நடமாடுகிற வெளியில் என் குரல் கேட்டுவிட்டது என்றே நினைக்கிறேன். ஒரு போர்க்கால நடவடிக்கை மாதிரி என்னை உயிருடன் மீட்டெடுக்க ஆயத்தங்கள் நிச்சயம் நடைபெற்றுக் கொண்டிருக்கத்தான் வேண்டும்.

நாளை மறுநாள் ஐஸ்வர்யாவுக்கு ஸ்கூல் அட்மிஷன். எலெக்ட்ரிசிடி பில் இன்னும் கட்டவில்லை. சீனுவுக்கு கல்யாண ரிசப்ஷன் 27-ஆம் தேதி மாலை. சொத்தைப் பல்பிடுங்க டாக்டர். ராஜ்குமார் அடுத்த வாரம் வரச் சொல்லியிருக்கிறார். நாலாவது மாடி கடனாளியிடமிருந்து ஐந்தாயிரம் வரப்பெற வேண்டும்.

இதற்கெல்லாம் முன்பாக நான் இந்தக் கன செவ்வகத்துக்குள் மடிந்துபோய் விடுவேனா என்ன?

நடக்கென்ற சப்தத்துடன் லிஃப்ட் குலுங்கியது அதிர்ந்து கண் திறந்தேன். தலைமேல் குண்டு பல்ப் எரிய, மின்விசிறி சுழன்று குளிர்காற்று இறங்கியது. சுதாரித்து எழ ஒரு கணமேனும் தராமல் வயிற்றில் ஒரு சுழற்சியை ஏற்படுத்திவிட்டு ஜிவ்வென்று கீழிறங்கியது லிஃப்ட் மறுபடி ஒளிர்ந்த மின்னணுத் திரையில் இறங்குமுகமாக எண்கள் மாறியது. தரைத்தளம் வந்து லிஃப்ட் நின்று…

‘அவ்வளவுதான் வெளியே போ’ என்கிற மாதிரி கதவுகள் அகலத் திறந்தன. சட்டை, பனியனுடன் வியர்வையில் உடலோடு ஒட்டியிருந்தது. காதோரம் ஒரு துளி வழிந்து தரை தட்டியது. குளுமைக் காற்று முகம் தாக்கியது.

வெளியே நிறைய தலைகள் தென்பட்டன. ‘நல்வரவு’ என்றான் எவனோ சிரித்தபடி. மத்திய சிறையிலிருந்து விடுதலையானவன் போல் லிஃப்ட்டுக்குள்ளிருந்து வெளி வரும் என்னை அயல் கிரகவாசியைப் பார்ப்பதுபோல் பார்த்து, ஒரு அயல்நாட்டுத் தூதுவருக்கான வரவேற்பைக் கொடுத்தார்கள். மணி பார்த்தேன். 11.06 பிரமை பிடித்த மாதிரி இருந்தது. நான் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதை சுற்றியிருப்பவர்கள் எனக்கு அறிவித்தபடி இருந்தார்கள்.

முழுசாய் நூற்றி இருபத்தேழு நிமிடங்கள். இதோ நான் காப்பாற்றப்பட்டு விட்டேன். மின்சாரம் போகவில்லையாம். ‘லிஃப்டின் இயக்க கோளாறு’ என்று யாரோ சொன்னார்கள்.

யார் யாரோ என்னென்னமோ பேசினார்கள். அந்தக் கூட்டத்தில் கடனாளியின் முகமும் தெரிந்தது. என்னைப் பார்த்ததும் எல்லோரையும் விலக்கி முன் வந்தான்.

“நானும் கொஞ்சம் கீழே போய்விட்டு வரலாம்னு லிஃப்ட்டுக்கு வந்தேன் சார் லிஃப்ட் மேல வரலை அப்புறம் லேசா சந்தேகம் வந்துச்சு. எங்கேயோ மாட்டிக்கிச்சுன்னு - இதுக்கு முன்னாடி ஒரு தடவை ஆயிருக்கு இது மாதிரி. ஆனா இப்ப மாட்டிக்கிட்டது. நீங்கதான்னு தெரியலை. எப்படியோ கஷ்டப்பட்டு எறக்கிட்டோம். மணி பதினொண்ணே கால் ஆயிடுச்சு. நான் வேணா வீட்ல ட்ராப் பண்ணட்டுங்களா?” என்றான்.

“இல்ல. வேண்டாங்க நான் ஆட்டோ புடிச்சு போய்க்கறேன். எல்லோருக்கும் ரொம்ப நன்றி…”

நான் விடுவிடுவென்று கொலாப்ஸிபின் கேட்டைக் கடந்து வெளியே வந்தேன். எனக்கென்னமோ அவன் புதன்கிழமை பணத்தைத் திருப்பி தருவான் என்று தோன்றவில்லை.

இன்னுமொரு ஞாபகம் ஆகஸ்ட் 28, 2007

Posted by சித்ரன் in Uncategorized.
add a comment

கல்கி : மே 1995

பஸ் கோவையை நெருங்கிக் கொண்டிருந்தது. அரைகுறை தூக்கம் கலைந்து விழித்தேன். இடுப்பெல்லாம் வலித்தது. சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு பன்னிரண்டு மணி நேரப் பயணமாகிவிட்டது. நிமிர்ந்து உட்கார்ந்தேன். சின்னக் கொட்டாவி ஒன்று நிதானமாய் ரிலீஸ் ஆனது.

கண்கள் அனிச்சையாய்த் திரும்பி என் வரிசை பக்கவாட்டு ஸீட்டில் அந்தப் பெண்ணைப் தேடின. ‘மடையா! அவள்தான் சேலத்திலேயே இறங்கிவிட்டாளே!’

யோசனைக் குதிரை பின்னோக்கி-அந்தப் பெண்ணை நோக்கி ஓடியது.

என்ன ஒரு அழகான பெண்?!! சென்னையில் தனியாய் ஏறினாள் வழியனுப்ப யாராவது வந்திருந்தார்களா என்று கவனிக்கவில்லை. அவள் முகத்தில் ஒரு தனி செளந்தர்யம். என் வரிசை ஸீட்டில் அவள் உட்கார்ந்ததற்கு எனது போன ஜென்மத்து புண்ணியங்கள் காரணமாயிருக்கலாம்.

ஆனால் அவள் இடதுகால்!? பஸ் படிகளில் ஏறும்போது அவள் நிறையவே சிரமபட்டதாய் உணர்ந்தேன். ஊனம் மெதுவாய் விந்தி விந்தி நடந்து ஸீட்டுக்கு வந்தாள். ஒரு கையில் சின்ன சூட்கேஸ். அழகைக் கொடுத்த இயற்கை, காலில் குறையையும் கொடுத்திருக்கிறது. திடீரென்று அந்தப் பெண்ணை எனக்கு ரொம்ப பிடித்துப் போனது.

என் தலைக்கு மேலுள்ள லக்கேஜ் கேரியரில் அவள் சூட்கேஸை வைக்க உதவினேன். புன்னகைத்தாள். அவளோடு பேச வேண்டும் என்றெழுந்த ஆவலைக் கட்டுபடுத்திக் கொண்டேன்.

சேலத்தில் அவள் இறங்கிக் கொண்டாள். அவளைப் பற்றின யோசனைகள் மனத்தைவிட்டு இறங்காமல் கோவை வரை பிடிவாதமாய் வந்துவிட்டன. ஊனமுற்ற அந்த அழகான பெண்ணிற்கு எந்த மாதிரி எதிர்காலம் காத்திருக்கிறது? சிந்தனைகள் வட்டம் அடித்தன.

“பஸ் ஸ்டாண்டு கேட்டது யாரு? இறங்குங்க…”

கண்டக்டர் கத்தினார். அதற்குள்ளாகவா கோயமுத்தூர் வந்துவிட்டது?

நான் வேகமாய் எழுந்து, லக்கேஜ் கேரியரிலிருந்து சரக்கென்று என் சூட்கேஜை உருவிக் கொண்டு இறங்கினேன்.

ராம் நகரில் என் அறைக்கு வந்து, பல் விளக்குவதற்காக பேஸ்ட் எடுக்க சூட்கேஸைத் திறந்தவன் திகைத்து நின்றேன்.

‘மைகாட்!’

அந்த சூட்கேஸீக்குள் இரண்டு புடைவைகள், ரவிக்கைகள் ஒரு சுரிதார் மற்றும் உள்ளாடை எல்லாம் தென்பட…

இது என் சூட்கேஸ் இல்லை!

அதிர்சியிலிருந்து மீளாமல் அதை மூடி மேல்புறம் பார்த்தேன். ‘எஸ். நீலா’ என்று ஆங்கிலத்தில் பெயர் தாங்கின ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது.

உண்மை உறைத்தது. உடலில் கலவரம் தொற்றிக் கொண்டது. சூட்கேஸ் கைமாறிவிட்டது. எப்படி? எப்படி? யோசிக்க ஆரம்பித்தேன். எங்கே வைத்திருந்தேன். அதை! தலைக்கு மேலேயே லக்கேஜ் கேரியரில். அங்கிருந்துதான் திரும்ப எடுத்… ஆம்! அந்தப் பெண்! அவன் சூட்கேஸையும் நான்தானே வாங்கி அதே இடத்தில் வைத்தேன். அதுவும் கூட இதே மாதிரிதானே இருந்தது. இல்லை. அதுதான் இது. என்னுடையது மாதிரியே. நிறம், உருவம், அளவு எல்லாம்.

என்னுடைய சூட்கேஸை அவள் எடுத்துக் கொண்டு போயிருப்பாள். ‘அந்த சூட்கேஸீக்குள் என்னுடைய அந்த..! ‘கடவுளே!’ என் அடிவயிற்றில் ஒரு பயம் மெல்ல கிளர்ந்தெழுந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

ஒருவேளை அவள் ஏதாவது ஃப்ராடு கேஸோ? ச்சே! இருக்காது. அந்தக் குழந்தை முகத்தைப் பார்த்தால்; அப்படித் தெரியவில்லை.

எஸ். நீலா!

இதுதான் அவள் பெயரா? இந்த நீலாவை நான் எங்கே போய்த் தேடுவேன்? நான் அந்தப் பெட்டியை மறுபடி திறந்து புரட்டி அட்ரஸ் எதுவும் கிடைக்குமா என்று பார்த்தேன். வெறும் துணிகள். கோல்கேட் பேஸ்ட் பிரஷ் மற்றும் பெண்கள் சமாசாரங்கள். இரண்டு புத்தகங்கள் ‘மைக்ரோஸாஃப்ட் சி’, ‘கிவ் அண்ட்டேக்’ஒரு சின்ன பர்ஸ். இருநூற்றிப் பன்னிரண்டு ரூபாய் ஐம்பது பைசா அதில் இருந்தது. ஒரு காலி இன்லேண்ட் லெட்டர். அட்ரஸ் மட்டும் இல்லை.

ஆனால் என் சூட்கேஸீக்குள் இருக்கிற பொருட்கள்? வெறும் பொருட்களா அவை? உடைகள் ஷேவிங் செட்டை விடுங்கள். மற்றதெல்லாம்..

என் ஐம்பத்து மூன்று கவிதைகள் தாங்கிய ஸ்பைரல் போட்ட ஒரு குயர் நோட்டு. வித்யாவின் கழுத்து மணி மாலையிலிருந்து அறுந்து விழுந்த மணிகள், கடிதங்கள், மேலும் கடிதங்கள், சாலை விபத்தொன்றில் பலியான என் உயிர் நண்பன் எனக்கெழுதிய ஒரே ஒரு கடிதம், கையில் பொம்மை பஸ் வைத்துக் கொண்டு போஸ் கொடுத்த என் ஒரே குழந்தை ஃபோட்டோ, அழகான பூனைக் குட்டிகள் படம் போட்ட - குழந்தை ராஜி என் பிறந்த நாளுக்கு பரிசளித்த - போல்ஸ்கா நாட்டு ஸ்டாம்புகள், என் ஐடென்டிடி கார்டு, தாத்தா ஞாபகமாய் வைத்திருந்த பாக்கு சீவுகிற கத்தி, ஜீவா பா¢சளித்த தி. ஜானகிராமன் புத்தகங்கள், என் சிறுகதை வெளியான ஆனந்த விகடன் புத்தகத்தின் ஒரே பிரதி. பேனாக்கள், கண்ணாடி க்ளாஸ், ஒரு காய்ந்த பெல்ட், ஆடியோ கேஸட், வளையல் துண்டு, மயிலிறகு, என் டயரி, அதற்குள் நான் மிக முயற்சித்துப் பெற்ற அருமை வித்யாவின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ… இன்னும் சில பொருட்கள்.

என்னைப் பொறுத்தவரை இது எல்லாமே பொக்கிஷங்கள் குப்பை என்று எதுவும் கிடையாது. கேட்பதற்குச் சிரிப்பாய்க்கூட இருக்கும். ‘சுத்த கிறுக்கனா இருக்க’ என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தப்பொருட்கள் எல்லாமே ஒவ்வொருவருடைய நினைவுகளைத் தன்னுள் அடக்கிக் கொண்டு கிடக்கிற பொக்கிஷங்கள். எப்போதாவது எடுத்துப் பார்க்கும்போது கிடைக்கும் அந்த இனிமையான பழைய நினைவுகளுக்காய் ஒவ்வொன்றையும் பொக்கிஷமாய் பத்திரப்படுத்தியிருந்தேன். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவர் ஞாபகம்.

போச்சு! எல்லாம் போச்சு!

லீவில் ஊருக்குப் போன நான் இவை எல்லாவற்றையும் எப்போதும் என்னுடனேயே வைத்திருக்கலாமே என்று சூட்கேஸீக்குள் அடைத்துக் கொண்டு வந்தேன்.

நிமிடத்தில் எல்லாவற்றையும் இழக்க வேண்டியதாய்ப் போயிற்று. பிரமை பிடித்த மாதிரி இருந்தது. அழுகைகூட வரும்போல் தோன்றியது. உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கினேன். ஜீரணிக்க முடிகிற இழப்பாய்த் தோன்றவில்லை இது.

வெளியே வந்து ட்ராவல் ஏஜென்ஸிக்கு நம்பிக்கை இல்லாமல் ஃபோன் பண்ணிப் பார்த்தேன். நினைத்த மாதிரியே அவள் அட்ரஸ் எதுவும் கிடைக்கவில்லை. பேர் சொல்லிவிட்டுப் பணம் கட்டினால் கோயமுத்தூர் கொண்டு வந்து இறக்கி விடுகிறார்கள். ஸீட் நம்பர்கள் எழுதின லிஸ்டில் பெயருக்கு நேரே ஒரு கையெழுத்து. அட்ரஸ் எங்கேயிருந்து கிடைக்கும்? என்ன ட்ராவல் ஏஜென்ஸி நடத்துகிறார்களோ!

ஏன் சூட்கேஸில் என் ஐடென்டிடி கார்டு இருக்கிறதே. அதில் என் அட்ரஸ்!

லேசாய் எனக்கு உயிரும் நம்பிக்கையும் மீண்டும் வந்தது. அவள் பெட்டி என்னிடமிருக்க, அவள் என்னை நிச்சயம் தொடர்பு கொண்டுதான் ஆக வேண்டும். அதுவரை காத்திருக்கலாம்.

ஒரு வாரம் மகா சோகாய்க் கழிந்தது. என் பெட்டி இனி எனக்குக் கிடைக்காது என்று நான் தொண்ணூற்றைந்து சதவீதம் முடிவு செய்துவிட்டேன். அவளின் ‘மைக்ரோசாஃப்ட் சி’ யைப் புரட்டினேன். ஒரு மண்ணும் பு¡¢யவில்லை. ‘கிவ் அண்ட் டேக்’கை நடுநடுவில் படித்துப் பார்த்தேன்.

அடுத்தவாரம் அந்தப் பார்சல் வந்தது. ஆச்சா¢யம். ஏக குஷியானேன். என்னுடைய பொக்கிஷப் பெட்டி பாதுகாப்பாய் வந்து சேர்ந்திருந்தது. கூரியர் சர்வீஸ் வாழ்க! நான் சந்தோஷத்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தேன்.

சூட்கேஸை அவசரமாய்த் திறந்தேன். நான் வைத்தபடி இல்லாமல் எல்லாம் கலைந்திருந்தன. ஆனால் எல்லாமே இருந்தன. சாய்ந்த கையெழுத்தில் ஒரு கடிதமும், பெயர் பார்த்தேன். நீலா. எஸ்.நீலா. அவளேதான். நிதானமாய்ப் படித்தேன்.

‘டியர் மிஸ்டர் பிரபாகர்…

இதோ உங்கள் உடைமை. (உங்களுடையதுதானென்று நினைக்கிறேன்.) அதுபோல் என்னுடையது உங்களிடம் இருக்குமென்று நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் காரணம் நான்தான். என் கவனக்குறைவு. மன்னிப்பீர்களா?

உங்கள் பெட்டியை அது பூட்டப்படாததால் திறந்து குடைந்தும் பார்த்தேன் -உங்கள் அனுமதியில்லாமல் மறுபடியும் மன்னிக்கவும். பெட்டியின் விஷயங்கள் ரொம்ப சுவாரஸ்யமாயிருந்தன. நீங்கள் எந்த மாதிரி ஆள்? பிடிப்படவில்லை.

கடிதங்களைப் படிக்க மனம் வரவில்லை. நாகரீகம் காரணம். கவிதை நோட்டை மூன்று மணி நேரம் செலவழித்துப் பொறுமையாய்ப் படித்தேன். அத்தனையும் வாவ்! எனக்கு ரொம்பப் பிடித்தது. நீங்கள் ஒரு கலைஞன் என்று புரிகிறது.

ஃபோட்டோவில் சிரிக்கும் அந்தக் கறுப்புக் குழந்தை யார்? ரொம்ப ஸ்வீட் ஐடென்டிடி கார்டின் ஃபோட்டோவில் நீங்கள் சுமார்தான்.

ஆனந்த விகடன் புத்தகத்திற்கு எதற்கு அட்டையெல்லாம் போட்டு வைத்திருக்கிறீர்கள்? அதுவும் பழைய்…ய புத்தகம். நான் உங்களின் தி. ஜானகிராமன் புத்தகங்களை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது ரூம்மேட் பானு அந்த சூட்டுக்காயை நிலத்தில் தேய்த்து, ‘சுள்’ளென்று சூடு வைத்த இடம் இன்னும் வலிக்கிறது. அந்த ஆடியோ கேஸட் கேட்க முடியவில்லை. பிழைத்தீர்கள்!

மேலும் வளையல் துண்டு, மயிலிறகு, மோதிரம், மணிமாலை… ஃபோட்டோவில் அந்தப் பெண். யார் அது? உங்கள் மனசுக்குள் இருப்பவளா? தப்பாய்க் கேட்டிருந்தால் ஸாரி…! கத்தி எதற்கு?

என் பெயர் நீலா, சென்னையில் தனியாய் பஸ் ஏறிச் சேலத்தில் இறங்கின கொஞ்சூண்டு அழகான பெண். கவனித்திருப்பீர்கள். (வேறொன்றையும் கவனித்திருக்கலாம்) சேலத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பு. முகவரி கீழே…

என் பெட்டி ப்ளீஸ்…

கீழே முகவரி இருந்தது. யப்பா! ஒன்றை விட்டுவைக்கவில்லை. புரட்டி எடுத்திருக்கிறாள். எனக்கு அதனால் கோபம் வரவில்லை. அவள் ஆர்வத்தை நினைத்து புன்னகை வந்தது.

இன்டரஸ்டிங் கேர்ள். இவளைப் போய் ஃப்ராடு என்றெல்லாம் நினைத்தேனே! ரொம்ப வெளிப்படையான டைப் போலும்.

‘நீலா’ என்று ஒருமுறை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். அவள் முகம் முழுதாய் நினைவுக்கு வராமல் கலைந்து கலைந்து போனது. ஒரே தடவை பார்த்தது. என் பொக்கிஷத்தைத் திருப்பி என்னிடமே ஒப்படைத்தவள்.

நீலாவின் சூட்கேஸை ஒழுங்குப்படுத்தினேன். என் மதிப்பான ஒரே கவிதை நோட்டை எடுத்தேன். அதன் உள் அட்டையில், ‘நீலாவுக்கு… நன்றியுடன் ப்ரபாகர்’ என்றெழுதி அதையும் அவள் சூட்கேஸில் வைத்தேன். ரொம்ப சந்தோஷமாயிருந்தது. சூட்கேஸை ரொம்ப சிரத்தையாய் பார்சல் செய்து அவள் முகவரி எழுதி அனுப்பி வைத்தேன்.

அப்புறம்… அவளின் அந்தக் கடிதத்தை அழகாய் மடித்து.. என் மற்ற பொக்கிஷங்களோடு அதையும் சேர்த்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். மற்றொரு ஞாபகச் சின்னமாய்!

ஜனனம் ஆகஸ்ட் 28, 2007

Posted by சித்ரன் in Uncategorized.
add a comment

மரத்தடி டாட் காம் - 2004

“ம்மா..” என்று அடி வயிற்றின் வேதனையடங்கிய குரல் எழுந்து அடங்கியது. பெரிதாய் வீங்கின வயிறுடன் நான்கு கால்களையும் பரப்பிக்கொண்டு மிரண்ட விழிகளுடன் அது தரையில் கிடந்தது. பலவீனமான மூச்சில் வயிறு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. வைக்கோலின் உதவியால் தற்காலிகமாக மென்மையூட்டப்பட்ட மண் தரையில் “புஸ்ஸ்” என்ற பெருமூச்சுடன் அது புரள முயன்று தோற்றது.

அந்தப் பசுமாட்டைச் சுற்றி கவலையும் பதட்டமும் கலந்த முகத்தோடு எல்லோரும் நின்று கொண்டிருந்தோம். அமுதாவின் முகம் இதற்கு முன் எப்போதும் பார்த்திராத மிரட்சியுடன் இருந்தது. “லட்சுமிக்கு ஒண்ணும் ஆகாதுல்ல” என்றாள் டாக்டரைப் பார்த்து. தன் பெயர் உச்சரிக்கப்பட்டதில் ஒருமுறை பசுமாட்டின் உடல் குலுங்கி அடங்கியது. அமுதா அதன் தலையை வாஞ்சையாய்த் தடவிக் கொடுத்தாள்.

வெடர்னரி டாக்டர் நெற்றியைச் சுருக்கி மிகத் தீவிரமான யோசனையுடன் அமுதாவை நிமிர்ந்து பார்த்தார். அவர் வாயிலிருந்து வரும் செய்திக்காய் எல்லோரும் பரபரப்பாய் காத்திருக்க, பசுவின் வயிற்றினுள் பரிசோதிக்கக் கையுறையாய் பயன்படுத்திய பாலிதீன் கவரைக் கழற்றி ஓரமாய்ப்போட்டார். அவர் சட்டை வியர்வையில் ஒட்டியிருந்தது.

“மாட்டு வயத்துல கன்னு தல திரும்பிருக்கு. காலும் தலையும் இடம் மாறியிருக்கு” என்றார் மெல்லிய குரலில்.

அமுதாவின் கண்களில் இதுவரை அணையிட்டு நின்றிருந்த நீர் “சர்” என்று கன்னத்தில் கோடிட்டுக் கீழிறங்கியது. அழுகையை அடக்கப் பார்த்த பிரயத்தனத்தில் “ம்க்” என்று சப்தம் வந்தது அவளிடமிருந்து.

“கன்னு போடற நேரம் ஊருக்குப் போகவேண்டாம்னு அப்பவே சொன்னேன் கேட்டியா” என்றாள் அமுதா அழுகையினூடே அவள் அம்மாவைப் பார்த்து. சேலை முந்தானையால் வாயைப் பொத்தி மாடிப்படியோரம் செய்வதறியாது நின்றிருந்த அவளின் அம்மா “யாரு நெனச்சா… இப்படியெல்லாம் ஆகும்னு… என்னை எதுக்குடி குத்தம் சொல்ற?” என்றாள்.

தரையில் லட்சுமி என்கிற அந்தப் பசுமாடு மறுபடி புரண்டெழ முயற்சித்தது. மறுபடியும் ஒரு வேதனையடங்கிய “ம்மா”. அந்தி மயங்கத் தொடங்கின அந்த நேரத்தின் நிசப்தத்தில் அந்த சப்தம் கொஞ்சம் கலவரமூட்டிக் கலைந்தது..

“இங்க பாருங்க… பேசிக்கிட்டுருக்கிற நேரமில்ல இது. வயித்துக்குள்ள கன்னு உசிரோட இருக்கறதுக்கு சான்ஸ் கம்மி. உடனே எப்படியாவது வெளிய எடுக்கணும். இல்லைன்னா மாடும் போய்ச் சேந்துடும். கொஞ்சம் சிரமப்பட வேண்டிவரும். ஒரு ஆறேழு ஆம்பளைங்க உதவிக்கு வேணும். அப்பறம் நெறைய சுடுதண்ணி, வைக்கோலு, கொஞ்சம் கயிறு, நாலு எமர்ஜென்ஸி லேம்ப், நாலஞ்சு சாக்கு எல்லாம் ரெடி பண்ணுங்க. எதுக்கால இருக்கிற ஃபேக்டரி கிரவுண்டுக்கு எப்படியாச்சும் பசுமாட்ட கூட்டிட்டுப் போயிடுங்க. நைட்டு ஒரு மணி ரெண்டு மணி ஆகலாம். நான் போயிட்டு ஒரு ஒம்பது மணிபோல வரேன். கூடவே எனக்கு லுங்கி, துண்டு வேணும் எடுத்து வைங்க”

டாக்டர் சுவரோர பைப்பில் கை கழுவிக்கொண்டார். அமுதா கொடியிலிருந்து உருவின துண்டை நீட்ட அதில் துடைத்துக் கொண்டார்.

“எல்லாரும் தைரியமா இருங்க. முயற்சி பண்ணிப் பாக்கலாம்.”

டாக்டர் தன் பழைய லேம்ரட்டா ஸ்கூட்டரில் ஏறி தெரு முனையில் மறைந்த பிறகு நாங்கள் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்.

தூக்கலாய் மூத்திர-சாணி நாற்றமடிக்கும் அந்த தொழுவத்தில், நிலைமையின் தீவிரம் உணராத வேறு இரண்டு மாடுகள் கவலையற்று அசைபோட்டுக்கொண்டிருந்தன. ஓரத்தில் என்றோ உடைந்து உபயோகமற்றுப் போயிருந்த ஒரு ஆட்டுக்கல்லின் மேலமர்ந்து அமுதா தேம்பி அழ ஆரம்பித்திருந்தாள். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லையெனினும் என்ன செய்ய வேண்டுமென்று புரிந்தது. தோளில் மிதமாய் கனக்கிற டிபன் பாக்ஸ் மற்றும் அலுவலகக் காகிதங்கள் அடங்கிய லெதர் பேக் நான் இன்னும் வீட்டுக்குப் போகவில்லையென்பதை உணர்த்தியது. “இங்க பாரு அமுதா… சும்மா கவலப்பட்டு அழுதுகிட்டிருக்காத. வேணுங்கறதை ஏற்பாடு பண்ணு. நான் வீட்டுக்குப்போயி கைகால் மூஞ்சி கழுவிட்டு வந்துர்ரேன்.”

இதுவரை வியந்தோ, அதிர்ந்தோ, கவலையுற்றோ, வேடிக்கை பார்த்தோ நின்றிருந்த இரண்டு மூன்று பேர் தன்னிலை உணர்ந்து அமுதாவைத் தேற்ற முயற்சிக்க நான் மெல்ல நகர்ந்தேன். வீட்டுப் படியேறி செருப்பைக் கழற்றுமுன்..”என்னங்க அமுதா வீட்டு…” என்று ஆரம்பித்த ஹேமாவை “பாத்துட்டுத்தான் வர்றேன்” என்று நிறுத்தினேன். “பாவம்ல அந்த மாடு” என்றாள் நிறுத்தாமல். ஆபிஸில் என்றுமிருக்கும் டென்ஷன், பஸ் இறங்கி நடந்து வந்த களைப்பு, வந்ததும் கேள்விப்பட நேர்ந்த இந்த விஷயம் எல்லாம் சேர்ந்து வரவேற்பரை பிளாஸ்டிக் சேரில் என்னைக் கொண்டுபோய் அசதியாய் உட்கார்த்தி வைத்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் கண்மூடி அப்படியே சாய்ந்திருந்தேன். ஒரு நிலையில் நிற்காமல் யோசனைகள் ஓடின.

இரண்டு வீடுகள் தள்ளி இருக்கிற அமுதா வீட்டில்தான் தினசரி பால் வாங்குவது. மூன்று கறவை மாடுகள் இருக்கின்றன. இந்தத் தெருவில் நிறைய பேருக்கு இங்கிருந்துதான் பால் போகிறது. அது தவிர தேவைக்கேற்ப சாணி, வரட்டி என காசு கொடுத்து வாங்கிக் கொண்டு போகவும் ஆட்கள் வரும். ஒரு நகரத்தின் கான்க்ரீட் கட்டிடங்கள் அடங்கிய இந்தத் தெருவுக்கு மத்தியில் மாடுகள் அடங்கிய அவர்களின் வீடு கொஞ்சம் பிரதானமான வித்தியாசம்தான். மற்றவருக்கு என் வீடிருக்கிற பகுதியின் அடையாளம் சொல்வதற்குக்கூட அது வசதியாகவே இருந்தது.

தினமும் வழக்கமாய் பால் கறந்த கையோடு அமுதா அளந்து எடுத்துவந்து தந்துவிட்டுபோவாள். சில தினங்கள் ஹேமா போய் வாங்கி வருவாள். ஏதாவது ஓரிரு நாட்கள் அபூர்வமாய் நான் போவேன். அப்படி இரண்டு நாட்கள் முன்பு போனபோதுதான் அமுதா வீட்டுத் தொழுவத்தில் அந்த வெள்ளை சினைமாட்டைப் பார்த்தேன். அதன் பார்வையும், நிற்க முடியாமல் கால் மாற்றி நின்றிருந்த அதன் அவஸ்தை நிலையும், மாடுகளோடு எனக்கு எந்தப் பரிச்சயமும் இல்லையெனினும் ஏதோ ஒரு அசாதாரணத்தை உணர்த்தியது போலிருந்தது. “அல்லாரும் ஊருக்குப் போயிருக்காங்க” என்றபடி பால் நிரம்பின எவர்சில்வர் சொம்பை என்னிடம் நீட்டின அமுதாவின் அண்ணனிடம் மாட்டைப் பற்றி விசாரித்தபோது “எல்லாம் அமுதா வந்து பாத்துக்கும்” என்று சொல்லிவிட்டு சாவதானமாய் பீடி பற்ற வைத்துக் கொண்டான். அப்போதே கவனித்திருந்தால் இப்படி விபரீதமாகாமல் தடுத்திருக்கலாமோ?

ஒன்பது மணிக்கு நான் எழுந்துபோய் கைகால் முகம் அலம்பிக் கொண்டு வந்தேன். ஒரு மிகப் பெரிய செயலுக்கான ஆயத்தம் போல நான் எனக்குள் உணர்ந்தேன். என்றாலும் மாட்டு டாக்டர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று என்ன யோசித்தும் சரியாய் புரிபடவில்லை. ஹேமாவிடம் இரவு டிபன் வேண்டாமென்றேன். “கண்டிப்பா அவங்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் பண்ணியாகணும். சரியா ஆம்பளை துணையில்லாத வீடு அது. பாவம். பால் வியாபாரத்துல இருந்து வீட்டு நிர்வாகம் வரைக்கும் எல்லா வேலையையும் அமுதா ஒத்தை ஆளா இருந்து பண்ணுது. பிரயோஜனமில்லாத அண்ணங்காரன். அப்பங்காரன். நான் போயிட்டு வர்றேன். நைட்டு ரெண்டு மணி ஆகுங்கிறாங்க. நீ கதவத் தாப்பாள் போட்டுட்டுப் படுத்துக்க.”

சட்டை பட்டனைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தேன். அமுதா வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்த பக்கத்து வீட்டு நடராஜன் கையில் எமர்ஜென்ஸி விளக்கு இருந்தது. என்னைப் பார்த்ததும் சிரித்தார். “அங்கதானே?…வாங்க இன்னைக்கு நமக்கு நிறைய ஜோலி இருக்கும் போல. இந்தப் புள்ள அமுதா என்னடான்னா மாட்டைப் பாத்து பாத்து ஓ..ஓன்னு அழுது. ரொம்பப் பாசந்தான். இருந்தாலும்… அட.. கொஞ்சமாச்சும் தெகிரியம் வேணுமில்ல..” என்றார்.

பேசிக்கொண்டே தொழுவத்தை அடைந்தபோது பசுமாட்டை அங்கே காணவில்லை. எதிர்புற ஃபேக்டரி கிரவுண்டுக்கு அதை இடம் பெயர்த்தி விட்டார்கள் போல. வெளியே டாக்டரின் லேம்ப்ரட்டா நின்றிருந்தது. திறந்திருந்த கேட்டை தள்ளிக்கொண்டு கிரவுண்டுக்கு வந்தபோது ஒரு சின்னக்கும்பலின் நடுவே கால் மடக்கிச் சாய்ந்திருந்தது பசுமாடு. பாலண்ணன் நின்றிருந்தார். மளிகைக்கடை ஆறுச்சாமி இருந்தார். மேலும் சிவில் இன்ஜினியர் சுந்தரராஜன். கேபிள் டி.விக்காரர். இப்படி நிறைபேர் அங்கே உதவிக்குக் கூடியிருந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயமொன்றுமில்லை. எல்லாம் அமுதாவின் குணத்துக்கும் முகத்துக்கும்தான். ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்துக்கு முன்பான கசகசப்புபோல எல்லாரும் கூடி நின்று பேசிக்கொண்டிருந்தது காற்றில் கரைந்து தெளிவில்லாமல் காதுகளை வந்தடைந்தது. டாக்டர் தன் பேண்ட் சட்டையிலிருந்து லுங்கி பனியனுக்கு மாறியிருந்தார். போதுமான அளவு எமர்ஜென்ஸி லேம்புகள் கிடைக்காததால் வெளிச்சம் போதாமல் இருண்டிருந்தது அந்தப் பிரதேசம்.

கும்பலில் இருந்த எதிர்வீட்டு அழகப்பன் ஓரிரு நிமிட யோசனைக்குப் பிறகு வீட்டுக்கு ஓடினார். திரும்பி வரும்போது அவர் கையில் இரு பட்டிகளுடன் கூடிய ட்யூப் லைட்டுகளும் நிறைய ஒயர்களும் இருந்தன. அவர் பதினைந்து வயது மகன் கூடவே பெரிய ஸ்டூல் ஒன்றையும் எடுத்துவர.. பத்து நிமிடத்தில் பக்கத்துக்கூரையில் அவைகளை சேர்த்துக்கட்டி ஃபாக்டரி ஓனரிடம் போனில் அனுமதிபெற்று கனெக்ஷன் கொடுத்தார்கள். பளீர் வெண்மை வெளிச்சத்தில் இருள் விலகி பசுவின் அவஸ்தை இப்போது தெளிவாய்த் தெரிந்தது. நான் ஏறியிறங்கும் அதன் வயிற்றையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நீ இருக்கியா.. போறீயா?” என்றார் டாக்டர் அமுதாவிடம்.

“இருக்கேன்”.

“சரி நேரமாகுது ஆரம்பிக்கலாம். சிரமம் பாக்காம எல்லாரும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” சொல்லிவிட்டு டாக்டர் மறுபடி பாலிதீன் கவர்களை கையுறைகளாய் அணிந்துகொண்டார். ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு பசுமாட்டினருகே கூட ஆரம்பிக்க.. டாக்டர் ஒருமுறை மாட்டைத் தொட்டு வணங்கினார். அமுதாவை ஒருமுறை திரும்பிப் பார்த்துக்கொண்டார்.

பிறகு நிறைய வைக்கோல் பரப்பியிருந்த தரைக்கு பசுவை நகர்த்தலாம் என்றார். ஆனால் மாட்டை அதற்குமேல் நகர்த்துவது சிரமமாயிருந்ததால் வைக்கோல்கள் இடமாற்றப்பட்டு அதனடியில் முடிந்தவரை பரப்பினார்கள். ஒருக்களித்துச் சாய்ந்திருந்த மாடு படுக்க வைக்கப்பட்டது. அமுதாவிடமிருந்து கயிறுகள் வாங்கி மாட்டின் கால்களைக் கட்டினார். பிறகு “நாலு காலையும் அழுத்திப் புடிச்சுக்குங்க. அசையவிடாதீங்க.. வாலை யாராவது தூக்கிப் புடிங்க” என்றார் நானும் நடராஜனும் இரு கால்களை அழுத்திக்கொள்ள, மற்ற இருவர் மற்ற இரு கால்களை. டாக்டர் கையுறைக் கையை மாட்டினுள் செலுத்தி சிறிது நேரம் பரிசோதித்தார். மாட்டை அப்படியே நாலைந்து தடவை திருப்பித்திருப்பிப் புரட்டிப் போடவேண்டுமென்றார்.

ஒரு நாலைந்துபேர் சேர்ந்து அதன் நான்கு கால்களையும் பிடித்து உயர எழுப்பி ஒரு சாக்கு மூட்டையைத் திருப்புவதைப் போல அப்படியே வலதுபுறம் திருப்பிப்போட்டோம். பிறகு வலதுபுறம். “ம்… அப்படித்தான்…தூக்கிப்போடுங்க…” டாக்டரின் குரல் உயர்த்திக் கத்தினார். வலது. இடது. வலது. இடது. “ம்..மா…” என்ற ஈனமான குரல் அதன் அடிமடியிலிருந்து புறப்பட்டது. என் உடல் ஒரு முறை நடுங்கிக் குலுங்கியது. நடராஜன் முகத்தைப் பார்த்தேன். கைகளில் அப்பியிருந்த தரை மண்ணைத் தட்டிவிட்டுக்கொண்டு அவரும் என்னைப் பார்த்தார். ஆனால் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

“இப்ப அப்படியே மொத்தமா புரட்டிப்போடுங்க. கால் ரெண்டும் கீழ போய் அப்பறம் மேல வர்ர மாதிரி..”

கடவுளே.

புரட்டிப்போட்டோம். தாங்கவொண்ணாத வேதனையில் இன்னொரு கத்தல். புஸ்..புஸ்ஸென்று பெருமூச்சு அதிகமாகி வயிறு அதிக உயரம் ஏறி இறங்க ஆரம்பித்தது. ஓரிரு நிமிடங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் டாக்டர் மாட்டின் வயிற்றினுள் கை செலுத்தி பரிசோதனை நடத்தினார். இந்தமுறை கொஞ்சம் அதிக நேரம். வைத்தகண் வாங்காமல் அனைவரும் டாக்டரின் செய்கையையே பார்த்துக்கொண்டிருக்க அங்கு நிலவின நிசப்தத்தை உடைத்துக்கொண்டு சிவப்பு கலந்த திரவம் கொழகொழவென்று வெளியேறி வழிந்தது.

நெற்றியிலிருந்து பெருக்கெடுத்து வழிந்த வியர்வையை இடது கையால் வழித்தெறிந்தார். தன்னை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொண்டார். பிறகு மீண்டும் பரிசோதனை. நான்கு நீளமான கயிறுகள் வாங்கி ஒவ்வொன்றின் முனையிலும் ஒரு சுருக்குப் போட்டுக்கொண்டு வயிற்றுக்குள் கைவிட்டு உள்ளே துழாவி அகப்பட்ட கன்றின் ஒவ்வொரு கால்களிலும் ஒவ்வொன்றாய்க் கட்டினார். துள்ளின மாடு பலப்பிரயோகத்தால் அடக்கப்பட்டது. இப்போது நான்கு கயிறுகள் மட்டும் மாட்டின் ஆசனத் துவாரத்தில் வெளிநீண்டிருந்தது. மாட்டைவிட பெரிதான பெருமூச்சொன்று டாக்டரிடமிருந்து புறப்பட்டது. எல்லோரும் உறைந்துபோய் நின்றிருக்க… முதலில் டாக்டர் பலம் முழுவதையும் திரட்டி இழுக்க அது லேசாய் வெளிவந்தது. கன்றின் ஒரு கால் குளம்பு.

“வாங்கப்பா இழுங்க. ஆனா விட்டுறக்கூடாது. அப்றம் கஷ்டம்.” டாக்டரின் கைகளுடன் இன்னும் பல கைகள் சேர்ந்துகொள்ள அந்தப் போராட்டம் ஆரம்பமானது. வெளித்தெறிந்த கன்றின் ஒரு காலை நான் பிடித்துக்கொள்ள மற்றவர்கள் கயிறுகளைப் பிடித்துக்கொண்டார்கள். குளம்பு, திரவத்தின் கொழகொழப்பில் பிடிகிடைக்காமல் வழுக்கியது. “ம்… இழுங்க..” என டாக்டரின் பத்து செகன்டுகளுக்கொருமுறை ஒலித்துக் கொண்டிருக்க பலங்கொண்டமட்டும் இழுக்க ஆரம்பித்தோம். திமிறின மாட்டை நான்குபேர் கால் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். ஆனால் அத்தனை எளிதில் எதுவும் நடந்து விடுவதாய்த் தோன்றவில்லை. முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு என் இதயத் துடிப்பு உயர்ந்து விட்டிருந்தது. எல்லோருடைய பெருமூச்சுகளும் இப்போது பூதாகரமாய் கேட்டது. கைகள் தகதகவென்று எரிந்து வலித்தன. இதெல்லாம் ஒரு வலியா?. குறைந்தபட்சம் இந்த தாய் மாட்டையாவது உயிரோடு காப்பாற்ற வேண்டுமே. இழு. இழு.

பட்டென்று கன்றின் குளம்பு மட்டும் குதிகாலோடு பெயர்த்துக் கொண்டுவிட.. இழுத்துக் கொண்டிருந்த எல்லோரும் மண்தரையில் தடுமாறிச் சரிந்தோம். அய்யோ என்று வாய் பொத்திக்கொண்டாள் அமுதா. “கெட்டுச்சு” என்றார் டாக்டர். “நகருங்க” என்று எல்லாரையும் விலக்கினார். மறுபடி வயிற்றுக்குள் கைவிட்டுத் துழாவினார். எதுவோ மீண்டும் அகப்படப் பலங்கொண்டமட்டும் பிடித்திழுத்தார். பட்டென்று ஒரு சப்தம் கேட்டது. “காலெலும்பு முறிஞ்சிருச்சுபோல” என்றார் யாரோ ஒருவர்.

“சும்மாருங்கய்யா” என்று டாக்டர் அதட்டினார். மாட்டின்மீதே சாய்ந்த மாதிரி படுத்துக்கொண்டிருந்தார் அவர். மீண்டும் ஒரு இழுப்பு. நீண்ட நேர முயற்சிக்குப்பின் ஒன்றும் முடியாமல் “சரி மூணு கயித்தையே இழுத்துப்பாப்போம். வாங்க…இழுங்க..” என்றார்.

இழுத்தோம். அத்தனை பேரின் பிரயத்தனமும் கவனமும் பலமும் பிரயோகிக்கப்பட்ட அந்த செயலில் கொஞ்சம் பலன் தெரியும்போல இருந்தது. வயிற்றுக்குள் நகர்ந்துகொடுக்கிற கன்றின் அசைவை கைகள் உணர்ந்தன. ஈரம் கலந்த ரத்தம், வழுக்கல்.. சணல் கயிற்றின் சொரசொரப்பில் கைகளின் எரிச்சல். ”விட்டுராதீங்க… விட்டுராதீங்க’ என்று டாக்டரின் எச்சரிக்கைக்குரல் அந்த நள்ளிரவில் எழுந்து எழுந்து அடங்கியது. எப்படியும் மணி பன்னிரண்டாவது இருக்கும்.

“கொடுமைங்க..” என்றார் நடராஜன் என் காதருகே. மீண்டும் அவரே சொன்னார். “வேற வழியில்ல..”

இப்போது மாடு தன் சக்தி முழுவதையும் இழந்து அரை மயக்க நிலைக்குப் போய்விட்டிருந்தது. மறுபடி ஒரு பத்து நிமிடங்கள் நடந்த அந்தப் போராட்டத்தின் முடிவில்.. குளம்பு முறிந்த கால் தவிர இன்னொன்றும் வெளித்தெரிந்தது. அதற்கப்புறம் எல்லாம் சுலபமாகிவிட்டது. இழுப்பின் திசையில் தாயின் மடியிலிருந்து கன்று சரேலென்று உருவிக்கொண்டு ரத்தக்கொழகொழப்புடன் சொத்தென்று வெளி வந்து விழ மறுபடி ஒரு முறை தடுமாறிச் சரிந்தோம். டாக்டரும்கூட. களைப்பான பெருமூச்சுக்களுடன் அத்தனை பேரின் பார்வையும் கன்றின் மேல் படிந்தது.

அமுதா ஓடிவந்து அதனருகே குனிந்தாள். அது உயிரோடிக்கிற சாத்தியக்கூறுகளை அவள் கண்கள் தேடி ஏமாந்தது. திறந்திருந்த அதன் அழகான விழிகளில் அதன் உயிர் எப்போதோ உறைந்து நிலைகுத்தியிருந்தது. அவள் கண்ணிலிருந்து நீர் பெருக்கெடுத்து வழிந்தது. கன்றின் உயிரற்ற சடலத்தினருகில் அப்படியே கால் மடங்கி உட்கார்ந்து கதறியழ ஆரம்பித்தாள்.

அந்த இடத்தின் அமைதியை விலக்கி பேச்சுக்குரல்கள் மெல்ல எழுந்தன. “ரொம்ப தேங்ஸ்ங்க. இத்தன பேரு உதவிக்குக் கிடைக்கும்னு நான் நெனைக்கவேயில்லை” என்று நன்றியோடு பார்த்தார் டாக்டர். மாட்டின் கால்களை அவிழ்த்துவிட்டார். கன்றினருகில் வந்து அதன் நான்கு கால்களையும் அலாக்காகத் தூக்கி மாட்டினருகில் “இந்தா” என்று போட்டார். அவரின் அந்த வார்த்தையில் நிறைய அர்த்தங்கள் புதைந்துகிடந்த மாதிரி உணர்ந்தேன். டாக்டர் கையுறைகளைக் கழற்றி வீசிவிட்டு பக்கெட்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கைகழுவிக்கொண்டார்.

“ஒரு வழியா ஆச்சு” என்றபடி கைகழுவிவிட்டு நடராஜன் எமர்ஜென்ஸி விளக்கை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டார். ட்யூப் லைட்டுகள் கழற்றப்பட்டு மறுபடி இருள் சூழ்ந்தது. அழகப்பன் மறுபடியும் மகனுடன் ஸ்டுல் உட்பட தன் பொருள்களைச் சேகரித்துக்கொண்டு நகர்ந்தார். இஞ்ஜினியர், கேபிள்காரர், மளிகை ஆறுச்சாமி எல்லோரும்கூட நகர ஆரம்பித்தார்கள்.

மாட்டுக்கு மற்ற சிஷ்ருஷைகளையும், சோதனைகளையும் முடித்துவிட்டு “காலைல சீக்கிரமா மறுபடி வந்து பாக்கறேன்” என்று நடுநிசியின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு டாக்டரின் லேம்ரட்டா புறப்பட்டுச் சென்றபிறகு மற்றவர்களும் கொட்டாவியைச் சுமந்தபடி நடையைக் கட்டினார்கள்.

நான் இன்னும் நின்றிருந்தேன். மனது கலக்கமாயிருந்தது. ‘உனக்கப்புறம் ஒரு பொட்டப்புள்ள ஆறுமாசத்திலயே குறையா பொறந்து இறந்துடுச்சு’ என்று அம்மா என்றைக்கோ ஒருமுறை சொன்னது ஞாபகம் வந்து போனது. என் கண்கள் லேசாய் ஈரமாகிவிட்டிருந்ததை உணர்ந்தேன்.

“கேட்டை மூடிரலாங்களா” என்று ஃபாக்டரி வாட்ச்மேன் குரல் என் கவனத்தைக் கலைத்தது. கடைசியாய் அமுதாவும் நானும் மட்டும் வெகுநேரம் அமைதியாய் அங்கு நின்றுகொண்டிருந்தோம். வெளிச்சம் கரைந்த இருளில் நிழலுருவமாய் தெரிந்த அமுதாவின் கண்களில் இன்னும் நீர் இருந்தது.

வேதனை கொஞ்சம் தணிந்திருந்த பசுமாடு மெல்ல ஒருக்களித்து எழுந்து அருகில் கிடந்த இறந்த கன்றின் உடலை வாஞ்சையுடன் நக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தது. நான் அதையே உறைந்துபோன நெஞ்சோடு இன்னும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

வீட்டுக்குத் திரும்பும்போது கிரவுண்டிலிருந்து “ம்ம்..மா” என்கிற குரல் மறுபடி எழுந்து தேய்ந்தது. என் உடம்பு ஒரு முறை லேசாய் சிலிர்த்து அடங்கியது.

அறை ஆகஸ்ட் 28, 2007

Posted by சித்ரன் in Uncategorized.
add a comment

மரத்தடி டாட் காம்

எனக்கு எதிரே அந்த அறை இருந்தது. வார்னீஷ் உபயத்தில் வருடங்கள் தாண்டி இன்னும் மினுமினுக்குகிற அதன் பெரிய கதவில் என் கண்கள் நிலைத்திருந்தன. அந்தக் கதவில் ஒரு புத்தரின் உருவம் தாங்கின ஸ்டிக்கர் ஒன்று. கண்கள் மூடி போதி மரத்தடி ஞானம். அதை அந்த அறையெங்கும் பரப்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறது. என் முன்பாக இன்னும் திறக்கப்படாத அந்தக் கதவின் உட்புற மர்மங்களின் மேல் என் கவனம் வெறி கொண்டு அலைந்து கொண்டிருந்தது. ஷிவ்ராம் ஏன் அந்த அறையை மட்டும் இன்னும் எனக்கு திறந்து காட்டாமலிருக்கிறார்? என்ன இருக்கிறது அந்த அறைக்குள்? அது ஏன் பூட்டியே கிடக்கிறது?

இந்தக் கேள்வியை முன்பு ஒருமுறை அவரிடம் நான் கேட்டபோது மையமாகப் புன்னகைத்துவிட்டு பதில் சொல்லாமல் நழுவிவிட்டார்.

நான் அந்த அறைக் கதவின் எதிரே இருக்கிற ஸோபாவில் சாய்ந்து அதை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். பல மாதங்களாக இங்கு வரும்போதெல்லாம் இது நடக்கிறது. ஷிவ்ராம் தனித்து வசிக்கும் இத்தனை பெரிய வீட்டிற்கு இந்த அறையை அவர் உபயோகிக்காமல் விட்டுவைப்பதில் அத்தனை நஷ்டமொன்றுமில்லைதான். ஆனால் இந்த வீட்டுக்குள் இத்தனை சுதந்திரமாய் உலவ எனக்கு அனுமதி தந்த ஷிவ்ராம் என்னை அந்த அறைக்குள் இன்னும் அனுமதிக்காமல் வைத்திருப்பது உறுத்துகிறது. அது பற்றிக் கேட்டபோது அது ஸ்டோர் ரூம் என்று ஏதாவது சொல்லிச் சமாளித்திருந்தால் மேற்கொண்டு நான் எதுவும் கேட்டிருக்க மாட்டேன். ஆனால் அன்று அவர் முகம் லேசாய் மாறியதும், ‘அதை எதுக்குப் பார்க்கணும், அங்கே ஒண்ணுமில்லை’ என்று லேசான நடுக்கத்துடன் சொன்னதும் அதை திறந்து பார்க்கிற
வலை அதிகப்படுத்திவிட்டது. மேலும் நாம் அதிகம் நேசித்து வசிக்கிற இடத்தில் அறைகள் முக்கியமில்லையா?

ஷிவ்ராமை நான் எங்கே எப்படி சந்தித்தேன் என்பது பெரிய சுவாரஸ்யமான விஷயம் அல்ல. இந்த ஒரு வருடத்தில் எங்கள் நட்பு எப்படி வலுப்பட்டு இறுகியது என்பது வேண்டுமானால் சிறப்புச் செய்தியாகச் சொல்லலாம். ஒரு தடவை என் லோக்கல் நகரத்தில் நடந்த ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில் ·போர் ·பார் வெனிஸ் பார்க்கப் போனபோது அறிமுகமானவர் ஷிவ்ராம்.

அவருக்கு ஒரு அறுபத்தைந்து வயதிருக்கலாம். ஜிப்பா. வெண்தாடி. தீட்சண்யமான கண்களை அணைத்திருக்கிற கண்ணாடி. அவரிடமிருந்து ஒரு தலைமுறை தள்ளியிருக்கிற என்னை அவருக்கு எப்படி பிடித்துப்போனதென்று தெரியவில்லை. ஒரு வேளை நான் சினிமாவில் பணியாற்றிக்கொண்டு சினிமாவை நேசிக்கிறவனாக இருப்பதால்கூட இருக்கலாம். உலக சினிமாக்கள், தேசிய அரசியல், இசை, ஓவியம் எல்லாம் பற்றி அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருக்கலாம்போல் இருக்கும்.

ஒரு நாள் வீட்டுக்கு வாயேன் என்று கூப்பிட்டார். போனேன். ஆறேழு அறைகளுடன் கூடிய பெரிய வீடு. பிரமிப்பாய் இருந்தது. நல்லவிதமாய் பராமரிக்கப்பட்ட அறைகள். வாழ்வுத் தேவைக்கு அதிகப்படியாய் வசதிகள். அத்தனை பெரிய வீட்டில் அவர் தனியாய் இருந்தார் என்பது ஆச்சரியத்தை அளித்தது. ஒரு வேலைக்காரர் மட்டும் அவ்வப்போது வந்து போவார்.

அவர் உறவுகள் பற்றி பொதுவாய் விசாரித்தபோது என்னை அவர் படுக்கை அறைக்கு அழைத்துச்சென்று டேபிள் ட்ராயரிலிருந்து போட்டோ ஒன்றை எடுத்து நீட்டினார். சுமார் முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், ஒரு பத்து வயதுப் பையனும் அதில் இருந்தார்கள்.

“என் மனைவியும், பையனும்..” கொஞ்சம் மெளன இடைவெளிவிட்டு “அவ சின்ன வயசிலயே போய்ச்சேர்ந்துட்டா.. பையன் கொஞ்சம் பெரியவனாகி..”

மேற்கொண்டு எதுவும் அவர் சொல்லவில்லை. எனக்கும் தயக்கத் திரைகளைக் கடந்து குடைந்து கேட்பதற்கும் விருப்பமில்லாமலிருந்தது. எத்தனை பழகினாலும் ஒவ்வொருவருக்கும் அந்தரங்கங்கள் வேறுவேறு. விருப்பமிருந்தால் அவராக ஒரு இளகின பொழுதில் எல்லாம் சொல்வார் என்று நம்பிக்கையிருந்தது. அதற்காக என் காதுகள் தயாராகவும் இருந்தன. பேசுவதை விட கேட்பது எனக்குப் பிடிக்கும்.

என்னிடம் மிகப் பிடித்த குணமும் அதுதான் என்று அவரே சொல்லியும் இருக்கிறார். ‘எப்படி நான் பேசறது எல்லாத்தையும் சகிச்சுக் கேட்டுட்டிருக்கிற?’ என்றும் கேட்பார் சிரித்தபடி. ஷிவ்ராமிடம் எனக்கு என்ன பிடித்தது என்று யோசித்தால் முதலில் ஞாபகத்துக்கு வருவது மென்மையில் தோய்த்தெடுத்த அவரது குரல். மெல்லிசாய் ஆனால் உறுதியாய் வெளிப்படுகிற அந்தக் குரலில் யாருமே கட்டுண்டு போவார்கள்.

முதல் சந்திப்பில் சம்பிரதாயமாய் ரம்பித்த பேச்சு பரிணாம வளர்ச்சியடைந்து இப்போது வெகு தூரம் முன்னேறிவிட்டது. சில நாட்கள் நான் அவருக்கு சமைத்துப் போட்டிருக்கிறேன். வீட்டைச் சுத்தம் செய்திருக்கிறேன். வேலையில்லாதபோது ஒரு முழுநாளும் அவருடனேயே இருந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறேன். அவருடன் மேலும் ஓருசில உலக சினிமாக்கள் பார்த்திருக்கிறேன். என் வீட்டுக்குப் போகாமல் அவர் வீட்டிலேயே நிறைய நாள் தங்கியிருந்திருக்கிறேன்.

ஷிவ்ராம் அடுக்களையில் எங்களிருவருக்கும் காபி தயாரித்துக்கொண்டிருக்கிறார். இன்று மறுபடியும் அவரிடம் கேட்டுவிடலாம் என்று தோன்றியது. அந்த அறை ஏன் பூட்டியே கிடக்கிறது?

ஆவி பறக்க ட்ரேயில் காபியுடன் அவர் வந்த போது மெதுவாய் “ஷிவ்..” என்றேன். (என்னை அப்படித்தான் கூப்பிடச் சொல்லியிருக்கிறார்). “இ·ப் யூ டோன்ட் மைண்ட்.. எனக்கு அந்த ரூமைப் பாக்கணும்”

இந்தத் தடவை அவர் சமாளிப்பதற்கான பதில் தேடி எதுவும் யோசிக்கவில்லை. எனக்கு உடனேயே எந்த பதிலும் சொல்லவில்லை. காபியை உறிஞ்சிக்கொண்டே கீழே குனிந்து சிறிது நேரம் பேசாமலிருந்தார். நேரம் கடந்தது. காபியின் கடைசி ஸிப்பை ருசித்துவிட்டு எழுந்தார். மெல்ல நடந்து உள்ளறைக்குச் சென்றுவிட்டார். எனக்கு ஒரு மாதிரி இருந்தது. ரொம்ப உரிமை எடுத்துக் கொள்கிறேனோ என்று என் மேலேயே கோபமாய் வந்தது. காபியின் கசப்போடு இது வேறு சேர்ந்துவிட்டது.

ஷிவ் ஓரிரு நிமிடங்களில் திரும்பி வந்தார். அவர் கையில் ஒரு சாவிக்கொத்து இருந்தது. என்னை நெருங்கினார். என் வலக் கையை எடுத்து சாவியை அதில் திணித்தார். “நீயே திறந்து பாத்துக்கோ” என்றார் புன்னகைத்தபடி.

“ஷிவ் நான் ரொம்ப உரிமை எடுத்துக்கறனா உங்ககிட்ட?”

அவர் பதில் சொல்லவில்லை. சாவிக்கொத்தை நீட்டிய கையும், அவர் புன்னகையும் அப்படியே இருக்கிறது. சரி! இனி இதில் மறுக்க என்ன இருக்கிறது? மேலும் என் இத்தனை நாள் ஆவல் என்ன? அந்த அறையை திறந்து பார்ப்பதுதானே? அவரும்கூட அதை எனக்குத் திறந்து காட்டுகிற தீர்மானத்தில்தான் இருக்கிறார் என்றும் தெரிகிறது. அப்புறம் என்ன?

மெதுவாய் சாவியை வாங்கிக்கொண்டு அந்தக் கதவிடம் நகர்ந்தேன். நான் யோசனையுடன் மெதுவாய் சாவித்துவாரத்துக்குள் அதைச் செலுத்தித் திருப்புவதை ஷிவ் அதே புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கதவின் மகா மெளனம் கலைகிற ஓசை ‘ப்ளக்’ என்று கேட்டது.

நான் கதவை தள்ளித் திறந்தேன். மறுநொடி என் முகத்தில் வந்தமர்ந்து தாண்டவமாடிய உணர்ச்சிகளைச் சொல்லமுடியாது. அத்தனை பெரிய அறையை நான் அங்கே எதிர்பார்க்கவில்லை. நீளமாய் மிகப்பெரிய அறை. இத்தனை நாள் இந்த வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தபோதெல்லாம் இதன் அமைப்பு எனக்கு பிடிபடாமல் போயிருக்கிறது. அதனுள்ளே லேசாய் நான் உள்நுழைய முற்பட குப்பென்று ஒரு நாற்றம் தாக்கியது. கதவில் பின்னியிருந்த சிலந்தி வலைகள் என் முகத்தில் கவிழ்ந்தன. காற்றில் தூசி நெடி மூக்கில் நெருடியது. பாதத்துக்குக் கீழே குப்பை நறநறத்தது. ஜன்னல்கள் திறக்கப்படாமலிருந்ததால் பாதி இருண்டிருந்தது.

அந்த அறைக்குள் நுழைந்தவுடன் என் ஆச்சரியத்தை பல மடங்கு உயர்த்திய அடுத்த விஷயம், அறையின் இரண்டு பக்கமும் பெரிய பெரிய அலமாரிகளில் நிரம்பி வழியும் புத்தகங்கள். நான் ஒரு புதையலைக் கண்டுபிடித்தவனின் உத்வேகத்துடன் அந்த புத்தகங்களை நெருங்கினேன். பெரியதும் சிறியதும் ஆக என்னென்னவோ புத்தகங்கள். குறைந்தபட்சம் மூவாயிரம் இருக்கும். அதிக பட்சம் ஆங்கிலம். ·போட்டோகிராபி பற்றி நிறைய இருந்தன. அப்புறம் அதுதவிர அலமாரிகளுக்கு மேல் ·ப்ரேம்கள் இடப்பட்ட பெரிய பெரிய புகைப்படங்கள். ஷிவ் ஒரு முறை காட்டிய அவர் மனைவி மற்றும் மகனின் ·போட்டோவும் அதில் இருந்தது. ஷிவ்ராமின் இளமைக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் போர்ட்ரைட் ஒன்று. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கிதார்கள். அதில் அதிர்ந்து அறுந்திருந்த கம்பிகள். அறையின் நடு நாயகமாய் ஒரு சுழல் நாற்காலி. ஒரு ஷெல்·பில் தூசு படிந்து இரண்டு மூன்று கேமராக்கள். லென்சுகள். புகைப்படங்கள் எடுக்க உபயோகிக்கப்படும் குடை ரி·ப்ளெக்டர் சமாசாரங்கள். ஓரிரு ட்ரைபாட் ஸ்டேண்ட். மேலும் என்னன்னவோ. ஒரு காலத்தில் அதிகம் புழக்கத்தில் இருந்த அறையாக இது இருந்திருக்கவேண்டும். இதை பூட்டி வைக்குமளவுக்கு என்ன கெட்டுப்போயிற்று
இப்பொழுது?

நான் வியப்பு மாறாமல் திரும்பிப்பார்த்தபோது அவர் அறைக்குள் வராமல் வெளியிலேயே நின்றிருந்தார். வருடங்கள் கடந்து தாக்குகிற நெடியில் எனக்கோ அங்கே நிற்கவே முடியவில்லை. ஜன்னல்களையெல்லாம் திறந்து விடலாமா என்று யோசித்தேன்.

என்ன இதெல்லாம் என்று நான் கேட்பதை என் புருவ நெளிவிலிருந்து உணர்ந்துவிட்டார் போல. மெல்ல உள்ளே வந்தார். அறையை நாலாப்பக்கமும் கண்களால் அளவெடுத்தார். அவர் முகபாவங்கள் லேசாக மாறின. அறுந்து தொங்குகிற சிலந்திவலைத் தோரணங்களிலும், குப்பையிலும், கலைந்து கிடக்கிற புத்தகங்கள், கிதார், கேமராக்கள் என்று ஒவ்வொன்றின் மேலும் அவர் பார்வை படிந்து மறைந்தது. லேசாய் அவர் கண்கள் பனித்து அதைத் தொடர்ந்து வெளிப்பட்ட அவர் குரல் கரகரத்திருந்தது.

“ஏழு வருடங்களுக்கப்புறம் இந்த ரூமைத் திறக்கிறேன்.”

ஏழு வருடங்களா? இருக்கலாம். இதன் பராமரிக்கப்படாத அவலட்சணக் கோலமே அதை சொல்லுகிறதே. நான் அவர் மேலும் பேசக் காத்திருந்தேன்.

“என்னைப் பற்றி உனக்குத் தெரியாததையெல்லாம் முதலில் சொல்லிடறேன்?” என்றார். நான் தலையாட்டினேன்.

நிறுத்தி நிதானித்து அவர் சொன்னார். “நான் அடிப்படையில ஒரு பயாலஜி ப்ரொபஸர். அதற்கப்புறம் போட்டோகிராபி மேல் இருந்த அதீத ஆர்வத்தினால வேலையை உதறிவிட்டு ஒரு முழுநேரப் போட்டோகிராபரா யிட்டேன். அப்புறம் வைல்ட் லை·ப் போட்டோகிராபில இன்ட்ரஸ்ட் வந்து கொஞ்ச நாள் பைத்தியமாய் காடு மலைன்னு அலைஞ்சேன். அப்றம் மாடலிங் போட்டோகிராபி. நிறைய பெரிய அட்வர்டைஸிங் ஏஜன்ஸிகளுக்கு வேலை செஞ்சிருக்கேன். முக்கியமான நகரங்கள்ல போட்டோகிராபி ஒர்க்ஷாப் நடத்தியிருக்கேன். என்கிட்ட கத்துகிட்ட நிறைய பேரு இப்ப அந்தத் துறையில பல சாதனை படைச்சிருக்காங்க. நிறைய அவார்டுகள் வாங்கியிருக்கேன். இதோ இங்க நீ பாக்கிறது எல்லாம் நான் எடுத்ததுதான். ஒண்ணு ரெண்டு சினிமாட்டோகிராபிகூட பண்ணியிருக்கிறேன். இப்ப கூட ஷிவ்ராம்னு சொன்னா இண்டஸ்ட்ரீல எல்லாருக்கும் தெரியும். ரொம்ப ரொம்பப் பாப்புலர். கொஞ்சம் ஜாம்பவான் மாதிரிதான் இருந்தேன்.”

நான் விழிவிரிய அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஷிவ்ராம் இவ்வளவு பெரிய ஆள் என்கிற விஷயத்தின் வியப்பில் அவரை நான் பிரமிப்புடன் வெறித்துக்கொண்டிருக்க அவர் தொடர்ந்தார்.

“உலகம் பூரா சுத்தினேன். நிறைய சம்பாதிச்சேன். பெரிய உயரத்துக்கு வந்தேன். எப்பவும் அலைச்சல். வேலை. வீட்டுக்கு என்னிக்காவது வருவேன். எப்பவும் புத்தகம் படிச்சுட்டு இருப்பேன். இதோ இது பூரா நான் கலெக்ட் பண்ணினது. கடைசில என்னாச்சு? என் பையனை கவனிக்காம விட்டுட்டேன். சின்ன வயசில அம்மாவை இழந்த பையன். கூடப்பிறந்தவங்க யாரும் கிடையாது. அவனுக்கு நிறைய பணம் குடுத்தேன். செல்லமா ஆனா தனியா வளர்ந்தான். ரொம்பத் தனியா! என்னோட அக்கறையும் கவனிப்பும், கண்டிப்பும் இல்லாம. நிறைய சுத்தினான். காலேஜ் படிக்கும்போது சிகரெட் கத்துக்கிட்டான். நான் பெரிசா கண்டுக்கலை. தண்ணி அடிக்க ஆரம்பிச்சான். எல்லாமே நிறைய. அப்புறம் போதைப் பழக்கம். நான் அதை சரியா கவனிக்க ஆரம்பிக்கும்போது ரொம்ப எல்லை மீறிப் போயிருந்தது. டி-அடிக்ஷன் சென்டர்ல விடும்படியா ஆயிடுச்சு. யாரும் கவனிப்பாரற்ற தனிமையில அவனுடைய இயல்பு நடவடிக்கையில நிறைய மாற்றம். கொஞ்சம் வயலண்டா ஆயிடுவான் அப்பப்ப. அப்றம் சைக்காலஜிஸ்ட்கிட்ட கன்ஸல்ட்.. இப்படி நிறைய நடந்தது.

கொஞ்சநாள் ஒழுங்கா இருந்தான். எனக்கு என் வேலை எப்பவும் சரியா இருந்தது. மறுபடி அவனை சரியா கவனிக்க முடியாம சந்தர்ப்பங்கள் அமைஞ்சுபோச்சு. ஒரு நாள் ஒரு நீண்டநாள் டூரிலிருக்கும்போது அவசர தகவல் கிடைச்சு வீடு வந்து சேர்ந்தேன் அவன் இதோ இந்த ரூமுக்குள்ளதான் செத்துக்கிடந்தான். அவன் செத்து மூணுநாள் கழிச்சுத்தான் அவனை இந்த ரூமுக்குள்ளேர்ந்து கண்டுபிடிச்சு வெளியே எடுத்தோம்.”

தழுதழுத்த குரலில் அவர் நிறுத்த நான் உறைந்துபோய் நின்றிருந்தேன். அந்தச் செய்தியின் அதிர்வை என் உடம்பு உள்வாங்கிக் கொண்டதில் சர்வ நரம்புகளும் நடுங்கின.

“ஐம் ஸாரி ஷிவ்.” என்றேன்.

“நானில்லாதபோது ஒருநாள் அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கு. மஞ்சள் காமாலைன்னு சொன்னாங்க. அதோடயே நிறைய குடிச்சிருக்கான். உடம்பு தாங்கலை. போய்ட்டான். உனக்கு இன்னொன்னு தெரியுமா? அவன் நல்லா கிதார் வாசிப்பான்.” மறுபடி கொஞ்சம் நிறுத்தி “கவனிப்பில்லாத தனிமை அவனைக் கொன்னுடுச்சு. அதோ அந்த ஸோபால கவுந்து கிடந்தான் கடைசியா
பார்க்கும்போது.” என்றார்.

நான் திரும்பிப் பார்த்தேன். அப்போதுதான் அந்த அறையின் மீதிப் பகுதிக்குள் பிரவேசிக்காமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது உறுத்தியது. அதிகம் வெளிச்சமற்று இன்னும் இருண்டிருந்த பகுதிக்கு மெதுவாய் எட்டு வைத்து நடந்தேன். புத்தக ஷெல்·புகள் ஓரிடத்தில் முடிந்து சரேலென்று இன்னொரு ஷெல்·ப் தொடங்கியது. அதில் முழுக்க பாட்டில் பாட்டிலாக நிறைந்து கிடந்தன. அவைகளில் வெவ்வேறு அளவுகளில் நிறைந்திருந்த ஆல்கஹால் திரவங்கள். அதன் மூக்கைத் துளைக்கும் நெடி. ஒரு டீப்பாய். அதன் மேல் ஷ்ட்ரே. அது முழுக்க புகைத்த சிகரெட் துண்டுகள் ஏராளமாய் கிடந்தன. அது தவிர நிறைய சிகரெட் டப்பாக்கள். பின் ஓரிரு சிரிஞ்சுகள். அப்புறம்.. அப்புறம்.. அப்போதுதான் நான் அதைப் பார்த்தேன். ஒரு அலமாரியில் புத்தகங்கள் பாதி எரிந்து கரியாய்க் கிடந்தன. என்ன இது?

“அவன் எரிச்சதுதான். ஒரு நாள் எம்மேல இருந்த கோவத்துல” என்றார் ஷிவ்ராம். “அவன் இறந்தப்ப இந்த ரூம் எப்படியிருந்ததோ அப்படியே விட்டுட்டு இந்தக் கதவைப் பூட்டிட்டேன். ஒரு பொருளை நகர்த்தலை. அப்புறம் திறக்கவும் இல்லை. யாரையும் உள்ளே விடவும் இல்லை. ஒரு மனுஷன் எப்படி வாழக்கூடாதுங்கறதுக்கு ஒரு மோசமான உதாரணம் இந்த ரூம். ஒரு அப்பங்காரன் தன் பிள்ளைங்ககிட்டே
எப்படியிருக்கணுங்கறதுக்கும்கூட. இல்லையா? எனக்கு எல்லாத்துலேயும் பிடிப்பு போய்டுச்சு. ரொம்ப கில்டியா ·பீல் பண்ணினேன். என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தா எனக்கே கேவலமா இருந்தது. எதுக்காக வாழ்ந்தேன்? எதுக்காக அவார்டு? விரக்தியடைஞ்சு எல்லாத்தையும் விட்டுட்டேன். போட்டோகிராபி உட்பட. இப்ப எனக்கு எதுவும், யாரும் கிடையாது. இதையெல்லாம் மனசுவிட்டு யார்கிட்டேயும் சொல்லணும்னுகூட தோணினதே கிடையாது. யாரும் கேட்டதும் இல்ல. கேட்டாலும் சொல்ல மாட்டேன். என் வைராக்கியத்தை முதல் முதலா நீ உடைச்சிருக்க”.

இதைச் சொல்லிவிட்டு ஷிவ்ராம் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். திடீரென்று கனத்துப் போன மனசுடன் நான் திகைத்து நின்றிருந்தேன். என் பிரியத்துக்குரிய ஒரு மனிதரின் பின்னால் இத்தனை பெரிய சோகம் இருக்குமென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. என் முன் ஒரு புதிராய் மெளனமாய் இருந்த இந்த அறை இப்போது தன்னை திறந்து காட்டி தன் அவலங்களையும்